மாமூல் கேட்டு மளிகை கடைக்காரருக்கு கத்தியால் வெட்டு..!

மாமூல் கேட்டு மளிகை கடைக்காரருக்கு கத்தியால் வெட்டு..!
X

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் போலீசார். 

பொன்னேரி அருகே மல்லிகை கடையில் மாமூல் கேட்டு கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பு மர்ம கும்பலுக்கு போலீசார் வலை வீச்சு.

பொன்னேரி அருகே பட்டப்பகலில் மாமூல் கேட்டு கடைக்குள் புகுந்து கடை உரிமையாளரை பட்டா கத்தியால் வெட்டிய மர்ம கும்பல் கடையில் இருந்து பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றது. போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் பகுதியில் சூர்யா ( வயது 23) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை சூர்யா கடையில் இருந்த போது இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 4பேர் கொண்ட கும்பல் சூர்யாவிடம் 1000ரூபாய் மாமூல் கேட்டுள்ளனர். கடையில் பணம் இல்லை என சூர்யா கூறியதால் ஆத்திரமடைந்த கும்பல் கடைக்குள் புகுந்து கல்லா பெட்டியில் இருந்த பணத்தை எடுத்தனர்.இதை கடை உரிமையாளர் சூர்யா தடுத்தார். அவர்கள் சூர்யாவை பட்டா கத்தியால் தலையில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதனையடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சூர்யா பொன்னேரி அரசு மருத்துவமனைக்குச் சென்று தலையில் தையல் போடப்பட்டு வீடு திரும்பினார். இந்த சம்பவம் தொடர்பாக பொன்னேரி போலீசார் அருகருகே உள்ள கடைகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து மாமூல் கேட்டு கடை உரிமையாளர் வெட்டப்பட்ட சம்பவம் வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
why is ai important to the future