செல்பி எடுத்தபடி ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற 3 வாலிபர்கள் உயிரிழப்பு

சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள்.
கும்மிடிப்பூண்டி அருகே நடந்த சாலை விபத்தில் இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த மூன்று வாலிபர்கள் பலியானார்கள்.
திருவள்ளூர் மாவட்டம், பெத்தி குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் அருகே இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் 927 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். உரிய கட்டுப்பாடுகள் இல்லாத இந்த முகாமில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக முகாம் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் சில மாதங்களாகவே தொடர்ந்து தற்கொலை முயற்சி மற்றும் விபத்துக்கள் நிகழ்த்த வண்ணம் உள்ளது.
இதன் தொடர்ச்சியாக பெத்திகுப்பம் இலங்கைத் தமிழர் முகாமை சேர்ந்த தயாளன் (19), சார்லஸ் (21), மற்றும் மதுரை இலங்கைத் தமிழர் முகாமை சேர்ந்த ஜான் (20) ஆகிய மூன்று வாலிபர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் ஏளாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் செல்ஃபி எடுத்தபடி முன்னாள் சென்ற டேங்கர் லாரியை முந்தி செல்ல முயன்றனர். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மூன்று பேரும் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் உயிரிழந்த மூவரது உடலையும் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu