ஆவடியில் பேருந்து படியில் ஆபத்தான பயணம்: மாணவர்களுக்கு தோப்புக்கரணம்
ஆவடியில், பேருந்தில் ஆபத்தை உணராமல் பயணம் செய்த மாணவர்களை தோப்புக்கரணம் போட வைத்து அறிவுரை கூறி போலீசார், அனுப்பி வைத்தனர்.
HIGHLIGHTS
பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் பஸ்களில் படிக்கட்டுகளில் மேற்கூரையும் தொங்கியபடி பயணம் செய்யும் வீடியோ காட்சி, கடந்த சில நாட்களாக அதிக அளவில் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் மாணவர்கள் வகுப்பறையில் ஆசிரியர்களை விரட்டும் காட்சியும், பெஞ்சுகளை உடைக்கும் காட்சிகளும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதைத்தொடர்ந்து, பள்ளி அருகே உள்ள பஸ் நிலையங்களில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும், படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் மாணவர்களை பிடித்து அறிவுரை கூறி அனுப்பி வைக்கின்றார்கள் அவ்வகையில், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அருணாச்சல ராஜா தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஆவடியில் இருந்து கண்ணியம்மன் நகர், கோவில் பதாகை, முத்தார புதுப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் மாநகர பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்து வந்தனர். இதனை கண்ட போலீசார் அந்த பேருந்தை நிறுத்தி தொங்கியபடி வந்த மாணவர்களை அனைவரையும் கீழே இறங்கச் செய்து பின்னர் அவர்களுக்கு மீண்டும் இதுபோன்ற தவறுகளை செய்யாமல் இருக்க அறிவுரை கூறி அங்கேயே தோப்புக்கரணம் போடச் செய்தனர். மீண்டும் இதேபோல் பேருந்துகளில் தொங்கியபடி பயணம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாணவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.