ஆவடியில் ஜன்னல் வழியாக லேப்டாப் திருட்டு: இருவர் கைது

ஆவடியில் ஜன்னல் வழியாக லேப்டாப் திருட்டு: இருவர் கைது

கைது செய்யப்பட்ட சந்துரு, சாரதி.

ஆவடி குடியிருப்பு பகுதியில் ஜன்னல் வழியாக லேப்டாப், மணி பர்ஸ் திருடும் சிசிடிவி காட்சிகளை வைத்து இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி சோராஞ்சேரி அசோக் நந்தவனம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்/30.தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வழக்கம்போல பணிக்கு சென்ற அவர்,மாலை வீடு திரும்பியுள்ளார்.வீட்டிற்கு வரும்போது மழையில் நனைந்து விட்டதால், சதீஷ் கீழ் தளத்தில் உள்ள அறையில் ஜன்னல் அருகே லேப்டாப்,பர்ஸ் உள்ளிட்ட பொருட்களை உலர்த்த வைத்துவிட்டு மேல் தளத்திற்கு சென்று உறங்கியுள்ளார்.

பின்னர் மறுநாள் காலை எழுந்து வேலைக்கு செல்ல தயாராகி, பொருட்களை பார்த்தபோது லேப்டாப் மற்றும் பர்சில் வைத்திருந்த 1000 ரூபாய் பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உடனடியாக ஆவடி காவல் நிலையத்தில் சதீஸ் புகார் அளித்தார்.

புகாரை பெற்றுக் கொண்ட ஆவடி குற்ற பிரிவு ஆய்வாளர் ரமணி தலைமையில் சம்பவ இடத்திற்கு தனிப்படை போலீசார் விரைந்து சென்று குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில், பூந்தமல்லி அருகே பதுங்கி இருந்த பட்டாபிராம், ஆயில்சேரியைச் சேர்ந்த சாரதி (வயது 20),ஆவடி காமராஜர் நகரைச் சேர்ந்த சந்துரு (வயது 20) ஆகிய இருவரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.அதில் காமராஜ் நகரை சேர்ந்த சந்துரு, ஆவடி சுற்று வட்டார பகுதிகளில் வழிப்பறி, வீடுகளில் கொள்ளை அடிப்பதை வாடிக்கையாக கொண்டு உள்ளார். அதேபோன்று ஆவடி சோராஞ்சேரி குடியிருப்பு பகுதியில் வீட்டை நோட்டமிட்டு சுவர் ஏறி குதித்து, ஜன்னல் ஓரம் வைக்கப்பட்டிருந்த லேப்டாப்பை, ஜன்னலுக்குள் கை விட்டு நைசாக திருடி உள்ளார்.

முன்னதாக அதே பகுதியில் மூன்றரை சவரன் தங்க நகை,600 கிராம் வெள்ளி பொருட்கள், ஐ.போன் உள்ளிட்டவற்றை திருடி உள்ளார். குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், அவர்களை கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணம், லேப்டாப், ஐ போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து குற்றவாளிகள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story