மாணவியிடம் தகாத செயல் தலைமையாசிரியர் பணியிடை நீக்கம்
தலைமை ஆசிரியர் சுப்பிரமணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
HIGHLIGHTS
உதகை அருகே முத்தோரை பாலாடா கிராமத்தில் ஏகலைவா அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணி கோக்கால் கிராமத்தை சேர்ந்த பழங்குடியின பிளஸ்-2 மாணவியின் கழுத்தில் அணிந்த துப்பட்டாவை கையால் இழுத்து கழற்றினார். இதனால் மாணவி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மாணவி ஊட்டி ஊரக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். மாணவியிடம் தகாத செயலில் ஈடுபட்ட உதகை அருகே கல்லக்கொரை கிராமத்தை சேர்ந்த தலைமை ஆசிரியர் சுப்பிரமணி (58) மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவியிடம் தலைமை ஆசிரியர் அத்துமீறியது உறுதி செய்யப்பட்டது. பின்னர் தலைமை ஆசிரியர் சுப்பிரமணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.