சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு: டிஎஸ்பி தகவல்

முத்துகாப்பட்டியில் நடைபெற்ற சமூக நல்லிணக்க கூட்டத்தில், மனித உரிமைகள் பிரிவு டிஎஸ்பி பழனிசாமி பேசினார்.
நாமக்கல் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீஸ் துறை சார்பில், முத்துகாப்பட்டி கிராமத்தில், அனைத்து சமூக மக்களின், நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் அருள் ராஜேஷ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். சேந்தமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், பஞ்சாயத்து துணைத் தலைவர் வரதராஜன், எஸ்ஐ பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீஸ் டிஎஸ்பி பழனிசாமி, கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது: எஸ்.சி., எஸ்.டி. வழக்குப்பதிவு செய்யப்படாமல் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் 3 கிராமங்களை தத்தெடுத்து, அவற்றுக்கு தலா ரூ.10 லட்சம் பரிசு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த பணத்தின் மூலம் பள்ளி கட்டிடம், லைப்பரரி, பொதுக்கழிப்பிடம் போன்ற மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை மேற்கொள்ளலாம். பரிசு வழங்குவது தொடர்பாக, கலெக்டருக்கு, மாவட்ட போலீஸ் எஸ்.பி பரிந்துரை செய்வார். எனவே முத்துகாப்பட்டி பகுதியில் தீண்டாமை சம்பந்தமாக எந்த ஒரு வழக்கும் இல்லாமல் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க அனைவரும் பாடுபட வேண்டும் என கூறினார்.
இக்கூட்டத்தில் போலீசார் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu