பரமத்தி அருகே ரூ.15 லட்சம் மதிப்புள்ள சந்தனமரங்கள் வெட்டிக் கடத்தல்
பரமத்தி அருகே தனியாருக்கு சொந்தமான நிலத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டுள்ளன.
HIGHLIGHTS
பரமத்தி அருகே தனியாருக்கு சொந்தமான நிலத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள சந்தன மரங்கள் வெட்டிக்கடத்தப்பட்டுள்ளன. இது சம்மந்தமாக போலீசாரும், வனத்துறையினரும் விசாரனை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே உள்ள, உள்ள கே.ராசாம்பாளையத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம் (40). இவர் கே.புதுப்பாளையத்தில் உள்ள தபால் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ரேவதி. இவர்களுக்கு சொந்தமான 90 சென்ட் பரப்புள்ள தோட்டம் கே.ராசாம்பாளையத்தை அடுத்த சூரியன்பாறை பகுதியில் உள்ளது. அந்த தோட்டத்தில் அவர்கள் அரசு அனுமதி பெற்று, கடந்த 16 ஆண்டுகளாக 97 சந்தன மரங்களை நட்டு வளர்த்து வந்தனர். சம்பவத்தன்று மாலை தர்மலிங்கத்தின் தாய் ராசம்மாள் அந்த தோட்டத்துக்கு சென்றார். அப்போது அங்கு 27 சந்தன மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் கடத்தல்காரர்கள், சில சந்தன மரங்களை பாதிவரை அறுத்து அப்படியே விட்டுச்சென்றுள்ளனர்.
இதுகுறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் தோட்டத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அந்த பகுதி ஒதுக்குப்புறமாக உள்ளதால், மர்ம நபர்கள் சந்தன மரங்களை வெட்டிக் கடத்தி சென்றது தெரியவந்தது. கடத்தப்பட்ட சந்தன மரங்களின் மதிப்பு சுமார் ரூ.15 லட்சம் ஆகும். இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் இது குறித்து நாமக்கல் வனத்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.