ப.வேலூர் பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை
பரமத்திவேலூர் பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
HIGHLIGHTS
பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. பரமத்தி, வேலூர், மோகனூர், பாண்டமங்கலம், ஜேடர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளையும் தேங்காய்களை வாரம்தோறும் இங்கு கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு விவசாயிகள் 5,987 கிலோ தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.29.15க்கும், குறைந்தபட்சமாக ரூ.24-க்கும், சராசரியாக ரூ.27-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்து 971-க்கு விற்பனை நடந்தது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு விவசாயிகள் 6 ஆயிரத்து 878 கிலோ தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.28.10-க்கும், குறைந்தபட்சமாக ரூ19-க்கும், சராசரியாக ரூ.26-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 78 ஆயிரத்து 145-க்கு வர்த்தகம் நடைபெற்றது. தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் தென்னை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.