கந்தம்பாளையம் அருகே அடையாளம் தெரியாத வானகம் மோதி அரசு பஸ் கண்டர்கள் பலி
பரமத்தி வேலூர் கந்தம்பாளையம் அருகே அடையாளம் தெரியாத வானகம் மோதி அரசு பஸ் கண்டக்டர் உயிரிழந்தார்.
HIGHLIGHTS
பரமத்திவேலூர் தாலுக்கா, கந்தம்பாளையத்தில் இருந்து பரமத்தி செல்லும் ரோட்டில் மேல்சாத்தம்பூர் பகுதியில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக நல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் உடனடியாக அங்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்தவர் திருச்செங்கோடு தொண்டி கரட்டை சேர்ந்த செந்தில்குமார் (45) என்பது தெரியவந்தது. அவர் அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து செந்தில்குமாரின் மனைவி பூங்கொடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கு சென்ற அவர் இறந்து கிடந்த கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து பூங்கொடியிடம் விசாரித்ததில், செந்தில்குமாருக்கு காலை 10 மணிக்கு போன் வந்ததாகவும், பின்னர் அவர் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் செந்தில்குமாரின் உடலை திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் தொடர் விசாரணையில் மேல்சாத்தம்பூர் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி கண்டக்டர் செந்தில்குமார் இறந்திருக்கலாம் என்று தெரிகிறது.
இச்சம்பவம் குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.