நாமக்கல் தனியார் ஓட்டலுக்கு கறிக்கோழி சப்ளை செய்த கடை உரிமையாளர் கைது
![நாமக்கல் தனியார் ஓட்டலுக்கு கறிக்கோழி சப்ளை செய்த கடை உரிமையாளர் கைது நாமக்கல் தனியார் ஓட்டலுக்கு கறிக்கோழி சப்ளை செய்த கடை உரிமையாளர் கைது](https://www.nativenews.in/h-upload/2023/09/19/1782057-fssai.webp)
தனியார் ஓட்டலில் ஷவர்மா சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட, மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து, நாமக்கல்லில் உள்ள உணவகங்கள் மற்றும் மீன் இறைச்சி விற்பனைக் கடைகளில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், சோதனை நடத்தினார்கள்.
நாமக்கல் நகரில் தனியார் ஹோட்டலில் ஷவர்மா சாப்பிட்ட 14வயது பள்ளி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார், மேலும் 43 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதையொட்டி நாமக்கல் நகரில் உள்ள ஃபாஸ்ட் புட் ஹோட்டல்கள் மற்றும் கோழிக்கடைகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது தரமற்ற கறிக் கறிக்கோழிகளை விற்பனை செய்த கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் பரமத்தி ரோட்டில், பழைய நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் கடந்த 16ம் தேதி சனிக்கிழமை சாப்பிட்ட மொத்தம் 44 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் நாமக்கல் கோட்டை நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்த மாணவி கலையரசி (14) என்பவர் உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உமா ஆஸ்பத்திரிகளுக்கு சென்று, பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மேலும், சம்மந்தப்பட்ட கடைக்கு நேரில் சென்று உணவுப் பொருட்களை சோதனையிட்டார். பின்னர் அந்த கடையை மூடி சீல் வைக்க உத்தரவிட்டார். மேலும் புகாரின் பேரில் கடை உரிமையாளர் நவீன்குமார் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த சமையல் தொழிலாளர்கள் 2 பேர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள ஹோட்டல்களில் சவர்மா, கிரில் சிக்கன், தந்தூரி சிக்கன் உணவு வகைகள் தயாரித்து விற்பனை செய்வதற்கு ஆட்சியர் தடை விதித்துள்ளார்.
ஆட்சியர் உமா உத்தரவின்பேரில், உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நாமக்கல் நகரில் உள்ள ஹோட்டல்கள், ஃபாஸ்ட் புட் உணவகங்கள், மீன் இறைச்சிக்கடைகள், கறிக்கோழிக்கடைகள் உள்ளிட்ட கடைகளை சோதனையிட்டனர். அப்போது பரமத்தி ரோட்டில் பிரச்சினைக்கு உள்ளான ஹோட்டலுக்கு சிக்கன் சப்ளை செய்த ராமாபுரம்புதூர், கோணார் கோழிக்கடையை அதிகாரிகள் சோதனையிட்டனர். அங்கு சுகாதாரமற்ற முறையில் கோழி இறைச்சி விற்பனை செய்ததை, அதிகாரிகள் கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து கோணார் கறிக்கோழிக் கடை உரிமையாளர் சீனிவாசன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது இபிகோ 373, 328, 304(2) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu