கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல்: கம்யூனிஸ்ட் கட்சியினர் 343 பேர் கைது

நாமக்கல் இந்தியன் வங்கி முன்பு, கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, கம்யூனிஸ்ட் கட்சியினர் 343 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் சேந்தமங்கலம் ரோட்டில் இந்தியன் வங்கி முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கசாமி தலைமை வகித்தார். தொடர்ந்து மத்திய பட்ஜெட்டில் தமிழகம் உள்பட எதிர்கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களுக்கு நிதி ஒதுக்காதது, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி குறைப்பு செய்தது உள்ளிட்டவற்றைக் கண்டித்து கோஷம் எழுப்பியபடி சேந்தமங்கலம் ரோட்டில் திரளான கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊர்வலமாக வந்தனர். பின், இந்தியன் வங்கியின் முன் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மொத்தம் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
* திருச்செங்கோடு மேற்கு ரத வீதியில் உள்ள இந்தியன் வங்கி முன்பு நடந்த மறியல் போராட்டத்திற்கு சிபிஐ நகர செயலாளர் சுகுமார், சிபிஎம் நகரச் செயலாளர் ராயப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். தொடர்ந்து திருச்செங்கோடு அண்ணாசிலை அருகில் இருந்து ஊர்வலமாக வந்த இந்தியன் வங்கி முன் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மொத்தம் 87 பேர் கைது செய்யப்பட்டனர். இதுபோல் மாவட்டத்திற்கு உட்பட்ட ராசிபுரம், பரமத்தி வேலூர், குமாரபாளையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் துறையினர் கைது செய்தனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 343 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu