நாமக்கல்லில் முட்டை விலை வரலாறு காணாத விலை உயர்வு: ஒரு முட்டை ரூ. 5.90

நாமக்கல்லில் முட்டை விலை வரலாறு காணாத விலை உயர்வு: ஒரு முட்டை ரூ. 5.90
நாமக்கல்,
நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. கோழிப்பண்ணை வரலாற்றில் முதல் முறையாக ஒரு முட்டை பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5.90 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக, மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. அதை பண்ணையாளர்கள் கடைபிடித்து வருகின்றனர். இந்த மாதம் துவக்கம் முதல் முட்டை விலை படிப்படியாக உயர்ந்து வந்தது. இந்த நிலையில் இன்று மாலை என்இசிசி மண்டல தலைவர் சிங்கரஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஏற்கனவே ரூ. 5.85 ஆக இருந்த முட்டை விலை மேலும் 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5.90 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கோழிப்பண்ணை வரலாற்றில் ஒரு முட்டையின் விலை ரூ. 5.90 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். இதனால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : ஹைதராபாத் 615, விஜயவாடா 620, பர்வாலா 624, ஹோஸ்பெட் 580, மைசூர் 632, சென்னை 640, மும்பை 675, பெங்களூரு 630, கொல்கத்தா 685, டில்லி 660 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கோழிவிலை: பிராய்லர் கறிக்கோழி உயிருடன் ஒருகிலோ ரூ. 94 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி விலை ஒரு கிலோ ரூ. 104 ஆக சிகா அறிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu