நாமக்கல் மாவட்ட நீர் நிலைகளில் இலவச வண்டல்மண் எடுக்கும் சேவை துவக்கிவைப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இலவசமாக வண்டல் மண் எடுக்கும் திட்டத்திற்கான, வெப்சைட்டை மாவட்ட கலெக்டர் உமா தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் 116 நீர் நிலைகளில், விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் செய்வோர் இலவசமாக வண்டல் மன் எடுத்துச் செல்லும் ஆன்லைன் வெப்சைட்டை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்.
நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளம், கண்மாய்களில் உள்ள வண்டல் மற்றும் களிமண் ஆகியவற்றை விவசாய பெருமக்கள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்கள் விவசாய பயன்பாட்டிற்கும் மற்றும் மண்பாண்டம் செய்வதற்கும் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம் என்றும், இதன்மூலம் இவர்கள் பயன்பெறுவதோடு, ஏரி, குளம் மற்றும் கண்மாய்கள் ஆழப்படுத்தப்பட்டு அதிக மழை நீரைச் சேமித்திட இத்திட்டம் உதவும் என்றும் தமிழக முதல்வர் அறிவித்து, சென்னையில் 10 பேருக்கு அனுமதி வழங்கி இத்திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தினை எளிமையாக செயல்படுத்திட, டிஎன்சேவை.டிஎன்.இன் என்ற வெப்சைட் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, தாசில்தார்கள் மூலம் அனுமதி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பயனாளிகள் தங்களது கிராமத்தில் அமைந்துள்ள நீர்நிலைகள் உட்பட அவர்கள் சேர்ந்த தாலுகாவில் அமைந்துள்ள நீர்நிலைகளிலும் வண்டல் மற்றும் களிமண் ஆகியவற்றை எடுத்துச் செல்லலாம். நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் செயற்பொறியாளர்கள், புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் துணை இயக்குநர், தாசில்தார்கள், விஏஓக்கள் மற்றும் ஏரி, குளம் மற்றும் கண்மாய் பொறுப்பாளர்களுக்கு இத்திட்டத்தினை செயல்படுத்திட வழிகாட்டும் நெறிமுறைகள் இயற்கை வளங்கள் துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் உமா கலந்துகொண்டு, மாவட்டத்திலுள்ள 116 நீர்நிலைகளில், விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக வண்டல் மண் எடுக்க பதிவு செய்திட டிஎன்சேவை.டிஎன்.இன் என்ற வெப்சைட் சேவையை தொடங்கி வைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu