காலி மனை வரன்முறை குறைபாடு: ரூ.50,000 இழப்பீடு வழங்க மாநகராட்சிக்கு கோர்ட் உத்தரவு

காலி மனை வரன்முறை குறைபாடு: ரூ.50,000 இழப்பீடு வழங்க மாநகராட்சிக்கு கோர்ட் உத்தரவு
X

பைல் படம் 

காலி மனை நிலத்தை வரன்முறைபடுத்துவதில் சேவை குறைபாடு புரிந்த, நாமக்கல் மாநகராட்சி, 50 ஆயிரம் இழப்பீடு வழங்க, மாவட்ட நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

காலி மனை நிலத்தை வரன்முறைபடுத்துவதில் சேவை குறைபாடு புரிந்த, நாமக்கல் மாநகராட்சி, 50 ஆயிரம் இழப்பீடு வழங்க, மாவட்ட நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த கருவேப்பம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன் மனைவி தமிழ்ச்செல்வி (56). இவர், 2000ம் ஆண்டில், நாமக்கல் நகராட்சி எல்லைக்குள் 3,200 சதுர அடி பரப்பு காலி மனை நிலத்தை விலைக்கு வாங்கியுள்ளார். தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட காலி மனை இடங்களுக்கான வரன்முறைபடுத்துதல் திட்டத்தின் கீழ், விண்ணப்ப பதிவு கட்டணமாக ரூ. 500 ரூபாய் செலுத்தி, 2021, பிப்ரவரியில் தேவையான ஆவணங்களுடன் நாமக்கல் நகராட்சியில் தமிழ்ச்செல்வி சமர்ப்பித்துள்ளார்.

தமிழ்ச்செல்வியின் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனை இடத்தை அங்கீகரிப்பதற்கான ஒப்புதலுக்காக, நாமக்கல் மாவட்ட நகர ஊரமைப்பு உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு, நாமக்கல் நகராட்சி சார்பில் விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது.

2021, மே மாதம், வரன்முறைபடுத்துதல் கட்டணம் மற்றும் வளர்ச்சி கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு வரன்முறைபடுத்துவதற்கான உத்தரவை வழங்குமாறு, நாமக்கல் நகராட்சிக்கு நகர ஊரமைப்பு உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து ஒப்புதல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்ச்செல்வியும் அவரது கணவரும் நாமக்கல் நகராட்சியை பலமுறை அணுகி கேட்டபோது சரிவர பதில் அளிக்காமல், வரன்முறை படுத்துவதற்கு மீண்டும் விண்ணப்பம் செய்யும்படி, நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால் வேறு வழியின்றி காலி மனை இடத்திற்கு வரன்முறைப்படுத்தி உத்தரவு வழங்கும்படி, விண்ணப்ப பதிவு கட்டணத்தை, 2021ம் ஆண்டு ஆகஸ்டில் மீண்டம் செலுத்தி, ஆவணங்களை நாமக்கல் நகராட்சியில் சமர்ப்பித்துள்ளார்.

இரண்டாவது முறையும் தமிழ்ச்செல்வியின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டு வரன்முறைப்படுத்துவதற்கான கட்டணத்தையும் வளர்ச்சி கட்டணத்தையும் பெற்றுக் கொண்டு, வரன்முறைபடுத்துதல் உத்தரவு வழங்குமாறு, நாமக்கல் மாவட்ட நகர ஊரமைப்பு உதவி இயக்குனர், நாமக்கல் நகராட்சிக்கும், தமிழ் செல்விக்கும் கடிதம் அனுப்பி உள்ளார்.

இதன் அடிப்படையில், 2021, அக்டோபரில், நாமக்கல் நகராட்சியில் வரன்முறை கட்டணம் ரூ. 26,820, வளர்ச்சி கட்டணம் ரூ. 74,500 ரூபாய், கொடி நாள் நிதி ரூ. 500 ரூபாய் ஆகியவற்றை தமிழ்ச்செல்வி செலுத்தியுள்ளார்.

உரிய கட்டணங்களை செலுத்திய பின்பும், காலி மனை இட வரன்முறைபடுத்தி அதற்கான உத்தரவை நகராட்சி வழங்கவில்லை. அதனால், 2023, ஏப்ரல் மாதம், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.

இருதரப்பு விசாரணை முடிந்த நிலையில், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதி ராமராஜ், உறுப்பினர்கள் ரமோலா, லட்சுமணன் ஆகியோர் நேற்று தீர்ப்பளித்தனர். அதில், நாமக்கல் நகராட்சி சேவை குறைபாடு புரிந்துள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டது. தமிழ்ச்செல்வி முதல் முறை வரன்முறைப்படுத்துவதற்கு விண்ணப்பித்த போது, நகர ஊரமைப்பு அலுவலகம் அதற்கு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனை முறையாக விண்ணப்பம் செய்தவருக்கு நாமக்கல் மாநகராட்சி தெரிவிக்கவில்லை. இரண்டாவது முறையாக தமிழ்ச்செல்வியால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம், நகர ஊரமைப்பு அலுவலகத்தால் ஒப்புதல் வழங்கப்பட்டு உரிய கட்டணங்கள் செலுத்தப்பட்ட பிறகும், தமிழ்ச்செல்விக்கு வரன்முறைபடுத்துதல் உத்தரவு வழங்கவில்லை. இது, சாட்சியங்கள் மூலமும் ஆவணங்கள் மூலமும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால், வழக்கு தாக்கல் செய்தவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடாக, ரூ. 50,000, நான்கு வாரங்களுக்குள் வழக்கு தாக்கல் செய்தவருக்கு, நாமக்கல் மாநகராட்சி வழங்க வேண்டும் என கோர்ட் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story