காந்தி ஜெயந்திக்கு விடுமுறை அளிக்காத 60 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு
காந்தி ஜெயந்திக்கு விடுமுறை அளிக்காத 60 நிறுவனங்கள் மீது நாமக்கல் மாவட்ட தொழிலாளர் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
HIGHLIGHTS

பைல் படம்
இன்று அக்.2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, விடுமுறை அளிக்காத 60 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது நாமக்கல் மாவட்ட தொழிலாளர் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அக்.,2ம் தேதி காந்திஜெயந்தியை முன்னிட்டு, தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. விடுமுறை அளிக்கவில்லையெனில் 3 தினங்களுக்குள் மாற்று விடுப்பு அளிக்க வேண்டும். அல்லது அன்றைய தினம் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். வணிகள் நிறுவனங்கள் இதுதொடர்பாக முன்கூட்டியே தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் அதற்குரிய படிவம் பூர்த்தி செய்து அனுமதி பெற வேண்டும் என்பது விதிமுறையாகும்.
இவ்விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது தொடர்பாக, இன்று, நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் சேலம் மாவட்டம் சங்ககிரி ஆகிய பகுதிகளில் தொழிலாளர் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதன்படி ஹோட்டல்கள், வாகன பழுது பார்க்கும் பட்டறைகள், கடைகள் உள்ளிட்ட மொத்தம் 82 வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 60 நிறுவனத்தினர் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றாமல் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் திருந்தன் உத்தரவின் பேரில், 60 நிறுவனங்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தொழிலாளர் உதவி கமிஷனர் தெரிவித்தார்.