ஏடிஎம் கொள்ளையர்களுக்கு சைபர் குற்றங்களில் தொடர்பு: கஸ்டடி எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு

நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன்.
குமாரபாளையம் அருகே துப்பாக்கி சூடு நடத்தி போலீசாரால் கைது செய்யப்பட்ட ஏடிஎம் கொள்ளயைர்களுக்கு, சைபர் குற்றங்களில் தொடர்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. அதனால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளை கஸ்டடி எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கேரள மாநிலம் திருச்சூரில் கடந்த மாதம் 27ம் தேதி அதிகாலை ஏடிஎம்களை உடைத்து ரூ.65 லட்சம் ரொக்கப் பணத்தை வட மாநில கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர். அவர்கள் கன்டெய்னர் லாரியில் தப்பி வரும் வழியில் குமாரபாளையம் அருகே நாமக்கல் மாவட்ட போலீசார் மடக்கிப் பிடித்தனர். அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஜூமாந்தின் (37) என்பவர் உயிரிழந்தார். காயமடைந்த முகமது ஹஸ்ரு (எ) அஜர் அலி (30) கோவை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இர்பான் (32), சவுக்கீன் கான் (23), முகமது இக்ரம் (42), சபீர் (26), முபாரக் (18) ஆகிய 5 பேர் கைது செயயப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வெப்படை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சேலம் சரக டிஜஜி உமா உத்திரவின்பேரில், நாமக்கல் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீசாரும் இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் நாள்தோறும் வெளியாகி வருகின்றன. இக்கும்பலைச் சேர்ந்தவர்கள் சைபர் குற்றங்களிலும் ஈடுபடுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து எஸ்.பி. எஸ்.ராஜேஷ்கண்ணன் கூறுகையில், ஹரியானா மாநிலத்தைச் சேரந்த இக்கும்பல் ஆரம்பத்தில் லாரிகளை திருடி வந்துள்ளனர். அப்போது கொலைக் குற்றங்களிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த கும்பலைச் சேர்ந்த முகமது இக்ரம் மீது மேற்கு வங்க மாநிலத்தில் கொலை, கொள்ளை உள்பட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அங்கு அவர் தனது பெயரை அக்ரம் என மாற்றி கொடுத்துள்ளார். இக்கும்பலைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினரும் குற்ற வழக்கு தொடர்புடையர்கள். லாரியை திருடி வந்த இக்கும்பல் பின்னர் ஏடிஎம்களை உடைத்து கொள்ளையடிக்க தொடங்கியுள்ளனர்.
இதில் சிக்கல்களை அதிகம் எதிர் கொள்ள வேண்டியுள்ளதாக கருதி இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் சைபர் குற்றங்களிலும் ஈடுபட தொடங்கியுள்ளது தெரியவருகிறது. காலில் குண்டடிபட்டு சிகிச்சை பெற்று வரும் அஜர் அலி இன்னும் சிறையில் அடைக்கப்படவில்லை. சிகிச்சைக்குப் பின் அவர் சிறையில் அடைக்கப்படுவார். மேலும், குற்றவாளிள் பல தகவல்களை மறைப்பதால், அவர்களை சிறையில் இருந்து போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளோம். கும்பல் தொடர்புடையவர்களை கைது செய்ய ஹரியான மாநிலத்திற்கும் தனிப்படை போலீசாரை அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu