நடிகர் சிவாஜிகணேசனின் 23வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி
நாமக்கல்லில் நடைபெற்ற, நடிகர் சிவாஜி கணேசனின், 23வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
மறைந்த பழம்பெரும் நடிகர் சிவாஜிகணேசனின் 23வது நினைவு நாள் நிகழ்ச்சி நாமக்கல்லில் நடைபெற்றது.
சிவாஜி கணேசன் சூரக்கோட்டையில் 1928ம் ஆண்டு அக். 1ம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயர் கணேசமூர்த்தி ஆகும். ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த சிவாஜி கணேசன், 1952 இல் பி. ஏ. பெருமாள் முதலியார்ங் என்பவர் தயாரித்த பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். வித விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதில் திறம்பட நடிப்பது இவரின் தனி திறனாகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 288 படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்படத்துறையில் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன்.
நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி, சிம்மக்குரலோன் என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்படுகின்றார். நீண்ட வசனங்களை எளிதில் உள்வாங்கிக் கொண்டு அதை உணர்ச்சிபூர்வமாக திரையில் பிரதிபலிக்கும் ஆற்றல் இவருக்கு இயல்பாகவே இருந்தது. நடிப்புக்கு சரித்திரம், புராணம் , குடும்பம், சமூகம் போன்ற அனைத்து விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று அதில் திறம்பட நடித்தவர் சிவாஜி கணேசன். மறைந்த காங்கிரஸ் தலைவர் காமராஜரின் தீவிர தொண்டாராக இவர் இருந்தார்.
சர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருதை வென்ற முதல் இந்திய நடிகர் சிவாஜி கணேசன். 1960 இல் எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்ற ஆப்பிரிக்க -ஆசிய திரைப்பட விழாவில் அந்த விருது வழங்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் பத்ம ஸ்ரீ, பத்ம பூசன் மற்றும் திரைப்பட துறையின் உயரிய விருதான தாதாசாஹெப் பால்கே விருது போன்ற பல விருதுகளை வென்றுள்ளார். மேலும் இவர் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது பெற்ற முதல் இந்திய நடிகரும் ஆவார். இவர் தனது 72வது வயதில் 2001ம் ஆண்டு ஜூலை 21ல் காலமாணார்.
நாமக்கல் சிவாஜி மன்றத்தின் சார்பில், மறைந்த பழம் பெரும் நடிகர் சிவாஜிகணேசனின் 23வது நினைவேந்தல் நிகழ்ச்சி, நாமக்கல் நேரு பூங்கா அருகில் நடைபெற்றது. நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக், நகர காங்கிரஸ் தலைவர் மோகன், சிவாஜி மன்ற மாவட்ட தலைவர் சந்திரசேகர், மாவட்ட துணைத்தலைவர் கண்ணன், ராசிபுரம் துரைசாமி, செல்வம், பாஸ்கர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடிகர் சிவாஜிகணேசனின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu