குமாரபாளையத்தில் 2வது நாளாக நீடிக்கும் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

குமாரபாளையத்தில் விசைத்தறி கூலி உயர்வு வேலைநிறுத்த போராட்டம் இரண்டாவது நாளாக நீடித்து வருகிறது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. இதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு ஒப்பந்தம் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது.
மாவட்ட கலெக்டர் முன்னிலையில், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்படும் என ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் கூட்டு விசைத்தறி தொழிலாளர சங்கத்தினர் என முத்தரப்பு பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்பட்டது.
ஆனால் ஏழு ஆண்டுகள் கடந்து இதுவரை கூலி உயர்வு வழங்கப்படவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு அடிப்படையில் 75 சதவீத கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் நேற்றுமுன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. வட்டாச்சியர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைத்து தீர்வு காண வேண்டும் என விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தாசில்தார் சண்முகவேல் கூறுகையில், விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு குறித்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஏற்படுத்த கேட்டுக்கொண்டுள்ளனர். விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் விசைத்தறி சங்கங்களான எல்.பி.எப், ஏ.ஐ.டி.யூ.சி, சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.சி.சி.டி.யூ, எல்.டி.யூ.சி. உள்ளிட்ட விசைத்தறி கூட்டுத்தொழில் சங்கத்தின் சார்பில் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஊர்வலமாக வந்த தொழிற்சங்கத்தினர் வட்டாச்சியர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.
குமாரபாளையம் விசைத்தறி தொழிற்சங்கங்கள் சார்பில் 20 சதவீத பொங்கல் போனஸ் கேட்டிருந்தனர். இதற்கு விசைத்தறி உரிமையாளர்கள் உடன்படவில்லை. இதனால் தாலுக்கா அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தாசில்தார் சண்முகவேல் சில நாட்கள் முன்பு ஏற்பாடு செய்திருந்தார். இதில் விசைத்தறி உரிமையாளர்கள் பங்கேற்கவில்லை. அவர்கள் பங்கேற்க முடியாத காரணம் குறித்து கடிதம் மூலம் தாசில்தாருக்கு தெரியப்படுத்தினர்.
கொங்கு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்க தலைவர் சங்கமேஸ்வரன் தலைமையில் போனஸ் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இது குறித்து சங்கமேஸ்வரன் கூறுகையில், நூல்விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால் தொழில் நடத்துவதே பெரும் சிரமமாக உள்ளது. தொழிற்சங்கத்தினர் 20 சதவீதம் போனஸ் கேட்டனர். இது குறித்து செயற்குழு கூட்டி முடிவெடுத்து சொல்கிறோம் என்று கூறி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
தொழிசங்க நிர்வாகி சுப்பிரமணி கூறுகையில், ஜவுளி உற்பத்தியாளர்கள் செயற்குழு கூட்டம் கூட்டி முடிவு சொல்வதாக கூறினார்கள். இது எங்களுக்கு உடன்பாடில்லை. தாசில்தாரை சந்தித்து இது பற்றி பேசினோம். முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தாசில்தார் ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu