ஈரோட்டில் பெண் தொழில் முனைவோர்கள் மாநாடு..!

ஈரோட்டில் பெண் தொழில் முனைவோர்கள் மாநாடு..!

ஈரோட்டில் நடந்த சிஐஐ இந்திய பெண்கள் இணையம் சார்பில் நடந்த தொழில் முனைவோர் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமைப்பின் தென் மண்டல தலைவர் டாக்டர் ஆர்.நந்தினி பேசினார்.

ஈரோட்டில் இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) தமிழ்நாடு இந்திய பெண்கள் இணையத்தின் (ஐடபுள்யூஎன்) பெண் தொழில் அதிபர்கள் மாநாடு இன்று (25ம் தேதி) நடந்தது.

ஈரோட்டில் இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) தமிழ்நாடு இந்திய பெண்கள் இணையத்தின் (ஐடபுள்யூஎன்) பெண் தொழில் அதிபர்கள் மாநாடு இன்று (25ம் தேதி) நடந்தது. மாநாடு தொடக்க விழாவுக்கு தமிழ்நாடு இந்திய பெண்கள் இணையத்தின் தலைவி கிருத்திகா சிவ்குமார் தலைமை தாங்கினார்.

விழாவில் இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவரும், இந்திய பெண்கள் இணையத்தின் முன்னாள் தமிழ்நாடு தலைவியுமான டாக்டர் ஆர்.நந்தினி கலந்து கொண்டு இந்திய பெண்கள் இணையத்துக்கான அடையாள சின்னத்தையும், மாநாடு டி-சர்ட்டினையும் அறிமுகப்படுத்தினார்.


அப்போது, அவர் பேசுகையில், பெண்களுக்கு பன்முகத்திறன் உள்ளது. தொழில் அதிபர் என்பது ஒரு திறன். நாம் தொழில் முனைவோராகவும், தொழில் செய்பவராகவும் இருக்கிறோம். இந்திய தொழில் கூட்டமைப்பில் பெண் தொழில் முனைவோர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

கொரோனா காலத்துக்கு பின்னர் தொழில் வளர்ச்சிக்காக மத்திய-மாநிலஅரசுகள் பல்வேறு வாய்ப்புகளை அளித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு அரசு பெண்களின் வளர்ச்சிக்காக பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் பெண்களின் எழுத்தறிவு அதிகமாக உள்ளது. இந்திய சராசரியை விட தமிழ்நாட்டில் பெண் எழுத்தறிவு அதிகம்’ என்றார்.

விழாவில், ஈரோடு மண்டல இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் டி.சண்முகசுந்தரம் பங்கேற்று பேசுகையில், இன்று அனைவரிடமும் ஸ்மார்ட் போன்கள் உள்ளன. ஆனால் அதை ஸ்மார்ட்டாக யாரும் பயன்படுத்துவதில்லை. அதுபோல நேரத்தையும் சரியாக பயன்படுத்த வேண்டும். திட்டமிட்டு வேலைகளை செய்ய வேண்டும். அப்போதுதான் முக்கியமில்லாத வேலைகளை விட்டு, மிக முக்கியமான வேலைகளை மட்டும் செய்ய முடியும்.

காலை 5 மணிக்கு எழுந்து தினந்தோறும் பணிகளை துவக்கினால் நமக்கு கூடுதலாக 2ல் இருந்து 3 மணி நேரம் கிடைக்கும். அந்த நேரத்தை ஆரோக்கியமாக பயன்படுத்தலாம். இலக்கை திட்டமிட்டு அடைய வேண்டும். இதற்கு சிறந்த புத்தகங்கள், சிறந்த நண்பர்கள் உடன் இருக்க வேண்டும் என்றார். இதைத்தொடர்ந்து, ‘நாளைய பொருளாதாரத்தை வடிவமைக்கும் பெண் தொழில்முனைவோர்கள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.

தொழில் முனைவோர்கள் கல்பனா, உமா சேகர், வி.எஸ்.ஆதித்தியன், வி.எஸ்.பிரதீப், சுதாகர் வைத்தியநாதன், நிஷ்டாஸ்ரீ ஸ்ரீனிவாசன், ஆர்த்தி சவுந்தர்ராஜன், கெசிக்கா ஜெயபாலன் ஆகியோர் பேசினார்கள். பெண் தொழில் அதிபர்கள் தாங்கள் நடத்தி வரும் நிறுவனத்தை மேம்படுத்துவது, வாரிசு வழியாக வந்த நிறுவனத்தை தங்கள் பொறுப்பில் விரிவுப்படுத்துவது, புதிய தொழில் துவங்க, அதற்கான அரசின் மானியம், வங்கி கடன் குறித்து தொழில் அதிபர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர்.

கருத்தரங்கினை இந்திய பெண்கள் இணையத்தின் ஈரோடு மண்டல ஒருங்கிணைப்பாளர் தீபா சக்திகணேஷ், அவந்தி நடராஜன் ஆகியோர் தொடங்கி வைத்து கருத்துரை வழங்கினர். முன்னதாக துணைத்தலைவி சவிதா கேசவ்ஜெகதீசன் வரவேற்றார். இணை ஒருங்கிணைப்பாளர் சுபஸ்ரீ ஸ்ரீராம் நன்றி கூறினார். இந்திய தொழில் கூட்டமைப்பு முன்னாள் தலைவர்கள் சி.டி.வெங்கடேஸ்வரன், அக்னி எம்.சின்னச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் ஈரோடு, சென்னை, கோவை, சேலம், கரூர் மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட பெண் தொழில் அதிபர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story