ஆப்பக்கூடல் அருகே இருசக்கர வாகனம்- சரக்கு லாரி மோதல்: அக்கா, தம்பி உயிரிழப்பு
ஆப்பக்கூடல் அருகே இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு லாரி மோதியதில் அக்கா, தம்பி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள பெரியகொடிவேரியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 19). தனியார் சர்க்கரை ஆலையில் பணியாற்றி வந்தார். இவரது சகோதரி ஞானசௌந்தர்யா (வயது 21). தனது கணவர் அசோக்குமார் மற்றும் 2 வயது மகனுடன் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை அடுத்த பல்லக்காபாளையத்தில் வசித்து வந்தார்.
இந்நிலையில், ஊரில் நடைபெறும் கோயில் திருவிழாவில் பங்கேற்க தனது சகோதரி ஞானசௌந்தர்யாவை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு பவானி - அத்தாணி சாலையில் கிருஷ்ணமூர்த்தி நேற்று மாலை சென்று கொண்டிருந்தார். அப்போது, மேட்டுப்பாளையத்திலிருந்து காய்கறி பாரம் ஏற்றிக்கொண்டு பவானி நோக்கி வந்த சரக்கு லாரி, ஆப்பக்கூடல் காவல் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஞானசௌந்தர்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின்பேரில் ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.