/* */

கூகுள்-பே மூலம் வடமாநிலத்தவர்களிடம் பணம் பறித்த மேலும் இருவர் கைது: குற்றச் செய்திகள்..

ஈரோட்டில் கூகுள்-பே மூலம் வடமாநில வாலிபர்களிடம் பணம் பறித்த மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கூகுள்-பே மூலம் வடமாநிலத்தவர்களிடம் பணம் பறித்த மேலும் இருவர் கைது: குற்றச் செய்திகள்..
X
கோப்பு படம்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் கொத்துகாரர் தோட்டத்தில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் சுதீர் (29), திலீப் ஆகியோர் தங்கியுள்ளனர். இவர்களிடம் கடந்த, 14ம் தேதி, ஏழு பேர் கும்பல் கொலை மிரட்டல் விடுத்து, கூகுள்-பே மூலம் 40 ஆயிரம் ரூபாய் பறித்தனர்.

வாலிபர்களின் புகார் படி வீரப்பன்சத்திரம் போலீசார், நேற்று முன் தினம் மூவரை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று பெரிய வலசை சேர்ந்த லிங்கேஸ் (57), பிரவீன் (29) ஆகியோரை கைது செய்தனர். மேலும், இதில் தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.

விபத்தில், பிளஸ் 1 மாணவன் பலி :-

ஈரோடு சூரம்பட்டி அருகே உள்ள தங்கம் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் சஞ்சய் (18). இருவரும் இருசக்கர வாகனத்தில் கோபி- சத்தி சாலையில், பிள்ளையார் கோவில் துறை என்ற இடத்தில் நேற்றிரவு சென்றனர்.

அப்போது, முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். கோபி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சஞ்சய் இறந்தார். கோவை அரசு மருத்துவமனைக்கு மணிகண்டன் அனுப்பி வைக்கப்பட்டார். விபத்தில் பலியான சஞ்சய், ஈரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தாயார் இறந்த துக்கத்தில் மகன் விபரீத முடிவு:-

பெருந்துறையை அடுத்த ஆயிகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 34). இவரின் மனைவி ஷகிலா. இருவரும் கட்டட தொழிலாளிகள். ஓராண்டுக்கு முன் ஆனந்தகுமாரின் தாயார் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இதனால் மனவேதனையில் இருந்த ஆனந்தகுமார் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார்.

கடந்த, 14ம் தேதி தாயாருக்கு திதி கொடுத்து விட்டு, வேலைக்கு சென்ற ஆனந்தகுமார் இரவில் வீட்டுக்கு வரவில்லை. நேற்று முன் தினம் அதிகாலை குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். மனைவியிடம் விஷம் குடித்து விட்டதாக கூறினார். அதிர்ச்சி அடைந்த ஷகீலா, ஈரோட்டில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்த்த நிலையில் ஆனந்தகுமார் இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.


Updated On: 17 Jan 2023 12:15 PM GMT

Related News