அந்தியூர் அருகே 108 ஆம்புலன்சில் மலை கிராம பெண்ணுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்

ஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தையுடன் அவசர கால மருத்துவ நுட்புணர் சதீஸ். உடன், ஓட்டுநர் கார்த்திக் ராஜா உள்ளார்.
அந்தியூர் அடுத்த பர்கூர் மலைக் கிராமத்தில் அடர்ந்த வனப்பகுதியில் 108 ஆம்புலன்சில் மலைக் கிராமப் பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள ப்கூர் மலைப்பகுதி தேவர்மலை மலை கிராமத்தைச் சேர்ந்தவர் தொட்டையன். இவரது மனைவி சாக்கி (வயது 35). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் இன்று சாக்கிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
தேவர்மலை கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் சென்று கர்ப்பிணி பெண் சாக்கியை அழைத்துக்கொண்டு பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருவதற்காக அடர்ந்த வனப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்தது. ஆம்புலன்சை ஓட்டுநர் கார்த்திக் ராஜா என்பவர் ஓட்டிச் செல்ல அவசர கால மருத்துவ நுட்புணர் சதீஸ் உடனிருந்தார்.
அடர்ந்த வனப்பகுதியில் ஆம்புலன்ஸ் பாறைமேடு என்ற இடத்தில் சென்ற போது சாக்கி பிரசவ வலி தாங்க முடியாமல் துடித்ததால் வாகனத்தை நிறுத்திவிட்டு அவசர கால மருத்துவ நுட்புணர் சதீஸ் சாக்கிக்கு பிரசவம் பார்த்தார். அப்போது, ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது.
அதனைத் தொடர்ந்து, தாய், சேய் இருவரும் பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, சாக்கிக்கு மேலும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து, தாயும், குழந்தைகளும் நலமாக இருப்பதாக அரசு மருத்துவர்கள் தெரிவித்தனர். மலைக் கிராமப் பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu