ஈரோட்டில் இன்று 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவு..!

வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மின்விசிறியை அதிகளவில் பயன்படுத்தும் மக்கள் (பைல் படம்).
ஈரோட்டில் இன்று 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ள நிலையில் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வருவதால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். காலை 7 மணி முதல் வெயில் தாக்கம் தொடங்குகிறது. மதியம் 12 மணி முதல் 4 மணி வரை அனல் காற்றுடன் வெயில் கொளுத்துவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் குழந்தைகள், பெரியவர்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர்.
கடந்த 14ம் தேதி நடப்பாண்டில் அதிகபட்சமாக இதுவரை இல்லாத அளவாக 104.3 டிகிரி பரான்ஹீட்டாக வெயில் பதிவாகி இருந்தது. இந்நிலையில், இன்று (29ம் தேதி) தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 104 டிகிரி பரான்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. வீடுகளில் கடுமையான புழுக்கம் நிலவுவதால் பெரியவர்கள், குழந்தைகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
மதிய நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாடுவதை குறைத்து விட்டனர். இதனால் மதிய நேரம் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. மின்விசிறியை அதிகளவு மக்கள் பயன்படுத்தினாலும் அனல் காற்று வீசுவதால் மக்கள் திணறி வருகின்றனர். மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள கரும்பு பால், இளநீர், மோர் ஆகியவற்றை அதிக அளவில் பருகி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu