ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.5.56 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்

அந்தியூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.88,500 பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.5.56 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தோ்தல் நாளை மறுநாள் (19ம் தேதி) வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. அதன்படி, தோ்தலில் வாக்காளா்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினா் நிலைக் கண்காணிப்பு குழுவினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். ஈரோடு மாவட்டத்திலும் இரவு, பகல் என சுழற்சி முறையில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம், பொருட்களைப் பறிமுதல் செய்து வருகின்றனா்.
அதன்படி, மாவட்டத்தில் கடந்த மார்ச் 16ம் தேதி முதல் இன்று (ஏப்ரல் 17ம் தேதி) புதன்கிழமை இன்று காலை வரை ஈரோடு கிழக்கு தொகுதியில் ரூ.90 லட்சத்து 26 ஆயிரத்து 707ம், ஈரோடு மேற்கு தொகுதியில் ரூ.94 லட்சத்து 81 ஆயிரத்து 890ம், மொடக்குறிச்சி தொகுதியில் ரூ.9 லட்சத்து 85 ஆயிரத்து 870ம், பெருந்துறை தொகுதியில் ரூ.43 லட்சத்து 12 ஆயிரத்து 220ம், பவானி தொகுதியில் ரூ.29 லட்சத்து 50 ஆயிரத்து 450ம், அந்தியூர் தொகுதியில் ரூ.13 லட்சத்து 50 ஆயிரத்து 250ம், கோபி தொகுதியில் ரூ.51 லட்சத்து 75 ஆயிரத்து 050ம், பவானிசாகர் தொகுதியில் ரூ.1 கோடியே 2 லட்சத்து 56 ஆயிரத்து 406ம் என 8 சட்டமன்ற தொகுதிகளில் 313 பேரிடம் ரொக்கப் பணமாக மொத்தம் ரூ.4 கோடியே 35 லட்சத்து 38 ஆயிரத்து 843 மற்றும் பொருட்களாக ரூ.1 கோடியே 21 லட்சத்து 31 ஆயிரத்து 996 மதிப்பில் பறிமுதல் செய்துள்ளனர்.
இதில், 260 பேர் ரொக்கப் பணம் ரூ.3 கோடியே 68 ஆயிரத்து 863 ரூபாய் உரிய ஆவணங்களை காண்பித்து பெற்று சென்றனர். மீதமுள்ள 53 பேரின் ரூ.1 கோடியே 34 லட்சத்து 69 ஆயிரத்து 980 ரூபாய் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர். முறையான ஆவணங்களை அளித்தால், பறிமுதல் செய்யப்பட்ட பணம் மீண்டும் வழங்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu