அந்தியூர் அருகே 1,150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

அந்தியூர் அருகே 1,150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கைது செய்யப்பட்ட இருவரை படத்தில் காணலாம்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே வாழை இலையை மூடி சரக்கு வாகனத்தில் கடத்த முயன்ற இருவர் கைது. 1,150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

அந்தியூர் அருகே வாழை இலையை மூடி சரக்கு வாகனத்தில் கடத்த முயன்ற 1,150 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த காவல்துறையினர் அரிசி கடத்திய இருவரை கைது செய்தனர்.

குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி உத்தரவின் பேரில் ஈரோடு டிஎஸ்பி சுரேஸ்குமார் மேற்பார்வையில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க ஈரோடு மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்தியூர் கெட்டி விநாயக் கோவில் அருகில் ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவதாக காவல் ஆய்வாளர் பன்னீர்செல்வம் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் மூர்த்தி ஆகியோருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் அங்கு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது. 23 மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம் மொத்தம் 1150 கிலோ ரேஷன் அரிசி வாழை இலைக் கட்டுகளால் மறைத்து கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சரக்கு வாகனத்தில் இருந்த சத்தியமங்கலம் வரதம்பாளையம், பத்ரகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்த சக்திவேல் என்பவரது மனைவி நந்தினி (வயது 30) மற்றும் சத்தியமங்கலம் விஎன்ஸ் நகரை சேர்ந்த குணசேகரன் (வயது 42) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் கடத்தலுக்கு பயன்படுத்தப் பட்ட சரக்கு வாகனம் மற்றும் அரிசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story