பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
X

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 3,851 கன‌ அடியாக அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 3,851 கன‌ அடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை, 105 அடி உயரமும் 32.8 டி.எம்.சி. கொள்ளளவும் கொண்டது. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள, 2 லட்சத்து, 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில நாட்களாக, பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்து வருவதால், அணைக்கு அவ்வப்போது அணைக்கு நீர்வரத்து குறைந்தும், அதிகரித்தும் என மாறி மாறி வந்து கொண்டுள்ளது.

மேலும், கடந்த சில நாட்களாக அணைக்கு நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து தற்போது 72 அடிக்கும் கீழே சென்றுவிட்டது. இந்நிலையில், திங்கட்கிழமை (நேற்று) நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்ததால் செவ்வாய்க்கிழமை (இன்று) பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,851 கன அடியாக அதிகரித்துள்ளது.

அதன்படி, இன்று (செப்டம்பர் 26) செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:-

நீர் மட்டம் - 72.37 அடி ,

நீர் இருப்பு - 11.97 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 3,851 கன‌ அடி ,

நீர் வெளியேற்றம் வினாடிக்கு - 2,900 கன‌ அடி ,

கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 2,300 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் 500 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீருக்காக 100 கன அடி நீரும் என மொத்தம் 2,900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு 1.6 மி.மீ ஆக பதிவாகியுள்ளது.

Tags

Next Story