ஈரோடு அருகே கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.25 லட்சம் பொருட்கள் சேதம்

ஈரோடு அருகே கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.25 லட்சம் பொருட்கள் சேதம்

விவசாய பண்ணை கருவிகள் கடையில் ஏற்பட்ட தீ விபத்தின் போது எடுத்த படம். உள்படம்:- தீ விபத்தை பார்வையிட்ட எம்பி பிரகாஷ்.

ஈரோடு அருகே விவசாய பண்ணை கருவிகள் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது.

ஈரோடு அருகே விவசாய பண்ணை கருவிகள் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது.

ஈரோடு அடுத்த சோலார் விஐபி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் என்கிற செல்வராஜ் (வயது 45). இவர், சோலார் அடுத்த மாணிக்கவாசகர் காலனியில் விவசாய பண்ணை கருவிகள் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில் கடையிலிருந்து திடீரென புகை வந்துள்ளது. இதனை அடுத்து தீ மளமளவென பரவி கடை முழுவதும் பரவி உள்ளே இருந்த விவசாய பண்ணை கருவி பொருட்கள் தீயில் எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு ஈரோடு, மொடக்குறிச்சி ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த ஐந்துக்கு மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் நேரில் சென்று தீயை அணைக்கும் பணியை பார்வையிட்டு உடனடியாக தீயை மற்ற கடைகளுக்கு பரவாமல் இருப்பதற்கான ஏற்பாட்டை செய்யுமாறு அறிவுறுத்தினார். தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி மற்ற கடைகளுக்கு தீ பரவாமல் தடுத்து அணைத்தனர். எனினும் கடையில் இருந்த சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின. இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக நடைபெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், தீ விபத்து சம்பவத்தை அடுத்து ஈரோடு - கரூர் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஈரோடு தாலுக்கா போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story