கோபி அருகே சூறாவளிக்காற்றுடன் மழை: 500 வாழை மரங்கள் சேதம்
சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் சேதமடைந்த வாழை மரங்கள்.
கோபி அருகே உள்ள காசிபாளையத்தை சேர்ந்தவர் சாமிநாதன். விவசாயி. இவர் அதே பகுதியில் 3 ஏக்கர் மக்காசோளம், வாழை பயிரிட்டுள்ளார், மேலும் 1½ ஏக்கரில் நேந்திரம் வாழை சாகுபடி செய்திருந்தார்,.
இந்தநிலையில் கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சாமிநாதன் தோட்டத்தில் இருந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்தும், சாய்ந்தும் நாசமானது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி சாமிநாதன் கூறும்போது, கடந்த 13 மாதங்களாக வாழைகளை சாகுபடி செய்ய ரூ.1 லட்சம் வரை செலவு செய்து பராமரித்து வந்தேன். இன்னும் 15 நாட்களில் அறுவடை செய்யும் நிலைக்கு தார் வந்திருக்கும். ஆனால் திடீரென வீசிய சூறாவளிக்காற்றுக்கு வாழைகள் சாய்ந்துவிட்டன. முறையாக அறுவடை செய்திருந்தால் ரூ.3 லட்சம் வரை விற்றிருக்கும். இப்போது கடன்தான் மிஞ்சியிருக்கிறது என்று வேதனையடைந்தார்.
மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தோட்டத்தை வந்து பார்த்து சேதங்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு பெற்றுத்தரவேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu