காஞ்சிக்கோவில், மயிலம்பாடி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோயில் மற்றும் மயிலம்பாடி பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சார்ந்த 143 மாணவ, மாணவியர்களுக்கு இலவச சைக்கிள்களை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.
HIGHLIGHTS

மயிலம் பாடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை அமைச்சர் முத்துசாமி வழங்கினார். அருகில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உள்ளார்.
காஞ்சிக்கோயில் மற்றும் மயிலம்பாடி பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சார்ந்த 143 மாணவ, மாணவியர்களுக்கு இலவச சைக்கிள்களை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.
பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், மாணவ, மாணவியர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா ஈரோடு மாவட்டம், மயிலம்பாடி மற்றும் காஞ்சிக்கோயில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவிற்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார். வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 143 மாணவ, மாணவியர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.
இவ்விழாவில், அமைச்சர் முத்துசாமி தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது. அதன்படி கடந்த ஜூலை மாதம் 27ம் தேதி முதல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 127 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 5 ஆயிரத்து 550 மாணவர்கள் மற்றும் 7 ஆயிரத்து 590 மாணவியர்கள் என மொத்தம் 13 ஆயிரத்து 140 எண்ணிக்கையில் ரூ.6.33 கோடி மதிப்பீட்டிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, தற்போது மயிலம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 36 மாணவர்கள், 40 மாணவியர்களுக்கும் என 76 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.3.66 லட்சம் மதிப்பீட்டிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது. அதே போன்று தொடர்ந்து காஞ்சிக்கோயில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 27 மாணவர்கள், 40 மாணவியர்களுக்கும் என 67 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.3.22 லட்சம் மதிப்பீட்டிலான விலையில்லா மிதிவண்டிகள் என மொத்தம் 143 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.6.89 லட்சம் மதிப்பீட்டிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது.
மாணவ, மாணவியர்கள் நல்ல முறையில் கல்வி கற்று தங்களது பெற்றோருக்கும் மற்றும் தங்களது பள்ளிக்கும் பெருமை சேர்க்க வேண்டும் எனவும் மாணவ, மாணவியர்களின் நலனுக்காக அரசு அளிக்கின்ற திட்டங்களை நல்ல முறையில் பெற்றுக் கொண்டு பயன்பெற வேண்டும் எனத் தெரிவித்தார். முன்னதாக, மயிலம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கலையரங்கம் கட்டுவதற்காக எக்ஸல் கல்வி நிறுவனம் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், காஞ்சிக்கோயில் பேரூராட்சித் தலைவர் திவ்யா, பவானி வட்டாட்சியர் தியாகராஜ், பள்ளி தலைமையாசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.