அந்தியூர் வனப்பகுதியில் குட்டியுடன் தாய் யானை உயிரிழப்பு
![அந்தியூர் வனப்பகுதியில் குட்டியுடன் தாய் யானை உயிரிழப்பு அந்தியூர் வனப்பகுதியில் குட்டியுடன் தாய் யானை உயிரிழப்பு](https://www.nativenews.in/h-upload/2023/03/26/1687019-picsart23-03-2611-09-40-659.webp)
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம், அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட முரளி பிரிவு, தாளக்கரை பீட், தென்பர்கூர் காப்புக்காடு மாரியணை சரகத்தில், நேற்று முன்தினம் காலை (வெள்ளிக்கிழமை) வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அடர்ந்த வனப்பகுதியில் பெண் யானை ஒன்று, குட்டியுடன் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து, அந்தியூர் வனச்சரக அலுவலர் க.உத்திரசாமி, ஈரோடு மாவட்ட வனக்கோட்ட அலுவலர் வெங்கடேஷ்பிரபுவிற்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து, நேற்று (சனிக்கிழமை) மாவட்ட வன அலுவலர் முன்னிலையில், வனக் கால்நடை மருத்துவர் சதாசிவம், அந்தியூர் கால்நடை உதவி மருத்துவர் கார்த்திக், தேவர்மலை கால்நடை உதவி மருத்துவர் பரத் ஆகியோரால் உயிரிழந்த பெண் யானை மற்றும் குட்டி யானையின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையின் போது, தாளக்கரை பழங்குடியின கிராம வனக் குழுத் தலைவர் கண்ணப்பன், தொண்டு நிறுவன அலுவலர் கௌசல்யா ஆகியோர் உடனிருந்தனர்.
இதில், உயிரிழந்த தாய் யானைக்கு சுமார் 30 வயதும், குட்டி யானைக்கு சுமார் 2 வயதும் இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, பெண் யானை மற்றும் குட்டி யானையின் உடல்கள் பிற வன உயிரினங்களின் உணவுக்காக அப்படியே விடப்பட்டன. மேடான பகுதியிலிருந்து தவறி விழுந்ததில் யானைகள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu