ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு
X

Erode news, Erode news today-- இன்று காலை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி தொடங்கியது.

Erode news, Erode news today-- ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் நாளை (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

Erode news, Erode news today-- ஈரோடு கிழக்குத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளராக ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் மற்றும் இதர அரசியல் கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் என 77 பேர் போட்டியிடுகின்றனர்.

இதனால் ஒரு வாக்குச்சாவடி மையத்துக்கு 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. ஈரோடு கிழக்குத் தொகுதியில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 ஆண்கள், 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 25 பேர் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் நாளை தங்களது வாக்குகளைச் செலுத்த, தொகுதிக்கு உட்பட்ட 52 இடங்களில் 238 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் 1,206 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர்.

238 வாக்குச்சாவடி மையங்கள் அல்லாமல் 20 சதவீதம், அதாவது 48 வாக்குச்சாவடி கூடுதல் மையங்கள் (ரிசர்வ்) என மொத்தம் 286 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நடைபெறவுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா ஒரு முதன்மை அலுவலர் மற்றும் 3 நிலைகளிலான வாக்குச்சாவடி அலுவலர்கள் என மொத்தம் 4 பேர் பணியாற்றுவர். அதன்படி, 238 வாக்குச்சாவடி மையங்களுக்கு 286 முதன்மை அலுவலர்கள், மூன்று நிலைகளிலான 858 வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளில் பணிபுரிய 62 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இத்தேர்தலில் பயன்படுத்தப்படும் 1,430 வாக்குப்பதிவு எந்திரங்கள் (ஈ.வி.எம்.), வாக்காளர்கள் வாக்களித்ததை உறுதிப்படுத்தும் 310 எந்திரங்கள் (விவிபேட்), 286 கட்டுப்பாட்டு எந்திரங்கள் (கன்ட்ரோல் யூனிட்) அனைத்தும் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் உள்ள பெட்டக அறையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் அதற்கென ஒதுக்கப்பட்ட ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்தப்பட்ட 20 வாகனங்களில், 20 மண்டல அலுவலர்களின் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லும் பணி தொடங்கியது.

இந்தப் பணியை மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுண்ணி மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

மேலும் அந்த வாகனத்தில் வாக்குச்சாவடி அலுவலரும், 238 வாக்குச்சாவடியிலும் பயன்படுத்தப்படும் பொருட்களான பென்சில், ரப்பர், பேனா, பசை, ஸ்டேப்ளர், ஸ்டேப்ளர் பின், சிறிய மற்றும் பெரிய பிளாஸ்டிக் டிரே, பிளாஸ்டிக் டிரம், குப்பைகளை போடுவதற்கான பிளாஸ்டிக் பக்கெட், சிறிய கயிறு, நூல், சீல் வைக்க தேவையான பொருள்கள், ஓட்டு பெட்டிகளை மறைத்து வைக்க பயன்படுத்தப்படும் பிரத்யேக அட்டை என 81 வகையான பொருட்களும் தனித்தனி சாக்கில் எடுத்துச் செல்லப்பட்டன. இத்தேர்தலையொட்டி, 238 வாக்குச்சாவடிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட 34 வாக்குச்சாவடிகளிலும் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பும், கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு பணியில் ஈரோடு மட்டுமின்றி கோவை, திருப்பூர், நீலகிரி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார், துணை ராணுவ வீரர்கள், ரெயில்வே சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றால் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை ஆதாரமாக பயன்படுத்தி வாக்களிக்கலாம்.

அதன்படி, ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்கு புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு, ஓட்டுநர் உரிமம், நிரந்த கணக்கு எண் அட்டை (பான் கார்டு), தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, இந்திய கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை, பாராளுமன்ற, சட்டமன்ற சட்டமேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை, இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்க ப்படும் தனித்துவமான இயலாமைக்கான அடையாள அட்டை ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
AI மூலம் சிறிய முதலீட்டில் பெரிய வணிகம் தொடங்க முடியும் - தமிழ்நாட்டில் எங்கும் சாத்தியம்!