விபத்தில் துண்டான கையை இணைத்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை சாதனை
Erode news, Erode news today- எதிர்பாராத விபத்தினால் துண்டிக்கப்பட்ட கையினை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக இணைத்து ஈரோடு தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 52). இவர் கடந்த மே மாதம் 30ம் தேதி இரவு எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி தனது வலது கை துண்டிக்கப்பட்டு ஆபத்தான நிலையில், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அரசு மருத்துவர்கள் உடனடியாக நோயாளியினை பரிசோதனை மேற்கொண்டதில், வலது கை இரண்டாக துண்டிக்கப்பட்டது அறியப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ள உடனடியாக நடவடிக்கைகள் எடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து, அறுவை சிகிச்சை மேற்கொள்ள தீர்வு செய்யப்பட்டு அறுவை சிகிச்சை அரங்கிற்கு அதிகாலை 12.30 மணியளவில் கொண்டு செல்லப்பட்டு, மயக்க மருந்து செலுத்தி அதிகாலை 1.30 மணியளவில் தொடங்கி காலை 9.30 மணி வரை 9 மணி நேரம் தொடர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வெற்றிகராமாக நிறைவுற்றது.
இந்த அறுவை சிகிச்சையானது மருத்துவர் கௌதம் தலைமையில் மயக்கவியல் மருத்துவர், 3 செவிலியர்கள் மற்றும் 4 பணியாளர்கள் மூலம் நடைபெற்றது. மேலும், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் 15 நாட்கள் தங்க வைக்கப்பட்டு மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தக்க சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
மேலும், இந்த அறுவை சிகிச்சையானது தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டிருந்தால் ரூ.5 லட்சம் தோராயமாக செலவாகும். ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், ரூ.59 ஆயிரத்து 300 ஒதுக்கீடு செய்யப்பட்டு முழுமையாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது, அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு மகாலிங்கம் வீட்டில் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu