பவானி - மேட்டூர் சாலையில் சுங்கச்சாவடி அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம்
தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் பவானியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பவானி - மேட்டூர் தேசிய நெடுஞ்சாலையில், சிங்கம்பேட்டையில் சுங்கச்சாவடி அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் பவானியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பவானி தேசிய நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். ஈரோடு வடக்கு மாவட்ட பொருளாளர் வினோத்குமார் வரவேற்றார். ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் செங்கை ரவி, மாவட்ட ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் குணசேகரன், பவானி நகர பொறுப்பாளர் ரகுமான் முன்னிலை வகித்தனர்.
கோரிக்கைகளை விளக்கி கட்சியின் மாநில தலைமை ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் சோதி குமரவேல், மாநில கொள்கை பரப்பு செயலாளர் திருப்பூர் சுடலை ஆகியோர் சிறப்புரையாற்றினார். ஈரோடு - பவானி - மேட்டூர் - தொப்பூர் மாநில நெடுஞ்சாலை 85 கிலோ மீட்டர் தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டு, ரோட்டின் இருபுறமும் தலா 1.5 மீட்டர் அளவுக்கு விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. நான்கு வழிச்சாலையாக இல்லாமல், இருவழிச் சாலையாக மட்டுமே தரம் உயர்த்தப்படும் இந்த ரோட்டில் ஈரோடு மாவட்டம், சிங்கம்பேட்டையில் கட்டண சுங்கச்சாவடி அமைக்கப்பட உள்ளது. இதனால், இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, சுங்கச்சாவடி அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதில், பவானி வட்டார விவசாயிகள் பாதுகாப்பு சங்க இணைச் செயலாளர் ராமலிங்கம், நிர்வாகிகள் பெருமாள், தங்கராசு, மேட்டூர் வலது கரை வாய்க்கால் பாசன சங்க துணைத் தலைவர் தனபால், ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன், மாநில தலைமை ஊடகப்பிரிவு துணை ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன், மாவட்ட மகளிரணி செயலாளர் சரஸ்வதி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் இம்மானுவேல், ஒலகடம் நகரச் செயலாளர் ஆறுமுகம், கோபி நகரத் தலைவர் சிவக்குமார், பவானி ஒன்றிய இளைஞரணி செயலாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu