சத்தியமங்கலம் அருகே ரேஷன் கடை ஊழியர் மீது புகார் மனு
சத்தியமங்கலம் அருகே ரூ.5.50 லட்சம், 4 பவுன் நகை மோசடியில் ஈடுபட்டதாக ரேஷன் கடை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் புகார் மனு அளித்துள்ளார்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் உதயம் நகரை சேர்ந்தவர் செல்வி (வயது 25) என்பவர் தனது 2 பெண் குழந்தையுடன் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில், எங்கள் பகுதியை சேர்ந்த ரேஷன் கடை ஊழியர் ஒருவர் கடந்த 2019-ம் ஆண்டு வீடு கட்டுவதற்காக என்னிடம் பணம் கடன் கேட்டார். அதனால் நான் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் 4 பவுன் நகை ஆகியவற்றை அவரிடம் கொடுத்தேன். உரிய காலத்திற்குள் பணம் மற்றும் நகையை திருப்பி தருவதாக அவர் கூறினார்.
ஆனால் பல முறை கேட்டும் அவர் பணம் மற்றும் நகையை கொடுக்கவில்லை. இதனால் நான் சத்திய மங்கலம் போலீசில் இதுபற்றி புகார் செய்தேன். அப்போது 2 தவணைகளாக கொடுப்பதாக ரேஷன் கடை ஊழியர் எழுத்து பூர்வமாக உறுதியளித்தார்.
ஆனால் அவர் பணம் கொடுக்காததோடு பொய் வழக்கு கொடுத்து என்னை சிறையில் தள்ளிவிடுவதாக மிரட்டல் விடுத்து வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து என்னுடைய பணம் மற்றும் நகையை மீட்டுத்தர வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.