ஈரோடு: மகளிர் சுய உதவிக்குழுவினர் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்ய வாய்ப்பு

ஈரோடு: மகளிர் சுய உதவிக்குழுவினர் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்ய வாய்ப்பு

சென்னை தீவு திடல் கண்காட்சி, உள்படம்: கலெக்டர் கிருஷ்ணனுண்ணி (பைல் படம்)

ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்யலாம் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

சென்னை தீவு திடலில் வருகிற ஏப்ரல் 29-ம் தேதி தொடங்கி மே 15-ம் தேதி வரையில் நடைபெற உள்ள மண்டல அளவிலான விற்பனை கண்காட்சியில் ஈரோடு மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுவினர் உற்பத்தி செய்த பொருள்களை விற்பனை செய்யலாம் என ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மகளிர் திட்டம், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யப்படும் தரம் வாய்ந்த கைவினைப்பொருட்கள், எம்பிராய்டரி துணி வகைகள், ஜமுக்காளம், பெட்ஷீட், கால்மிதியடிகள், ரெடிமேடு ஆடைகள், பரிசுப்பொருட்கள், மண்பாண்டப் பொருட்கள், பூ வகைகள், ஊதுபத்தி, தேன், மூலிகைப்பொருட்கள், அலங்கார சங்கு பொருள்கள், கைப்பைகள், உணவுப்பொருட்கள், சணல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அறிமுகப்படுத்தவும், விற்பனை செய்யவும் வாய்ப்பு தரப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் இந்தச் சங்கத்தில் பதிவு செய்து, அரசுத் துறைகள் மூலமாக நடைபெறும் விற்பனைக் கண்காட்சியில் இடம் பெறலாம். இதற்காக, மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களின் மாதிரி, உற்பத்தியாளரது ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கீழ்க்காணும் முகவரிக்கு கொண்டு வந்து ஏப்ரல் 21-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இதர விவரங்கள் குறித்து தெரிந்து கொள்ள, தமிழ் மகளிர் மேம்பாட்டுத் திட்டம், திட்ட செயலாக்க அலகு, முதல் தளம், பூமாலை வணிக வளாகம், குமலன்குட்டை, பெருந்துறை சாலை, ஈரோடு-11 என்ற முகவரியை அணுகலாம்.

மேலும், விவரங்களுக்கு 94440 94276 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களைப் பதிவு செய்து, மகளிர் திட்டம் மூலம் ஏற்படுத்தித் தரப்படும் விற்பனை வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story