பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,761 கன அடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணை.
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை மற்றும் தமிழ்நாட்டில் 2-வது பெரிய அணை என்ற பெருமை கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் வழியாக 5 மதகுகள் மூலம் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
கடந்த சில மாதங்களாகவே அணைக்கு நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்ததால் நீர்மட்டம் குறைந்து வந்தது. இதேபோல் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது. நேற்று முன்தினம் (4-ம் தேதி) செவ்வாய்க்கிழமை காலை 8 மணி அளவில் பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 138 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 76.94 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 1,200 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று (5-ம் தேதி) புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 894 கன அடி தண்ணீர் வந்தது. தொடர்ந்து, அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இன்று (6-ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 77.41 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 14.35 டிஎம்சியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,761 கன அடியாகவும் உள்ளது. அணையில் இருந்து 1,205 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணையின் நீர் மட்டம் மேலும் உயரும் என்று தெரிகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu