சென்னிமலை அருகே திருமண கோஷ்டியினரை விரட்டி கொட்டிய தேனீக்கள்: 31 பேர் காயம்

சென்னிமலை அருகே திருமண கோஷ்டியினரை விரட்டி கொட்டிய தேனீக்கள்: 31 பேர் காயம்

ஆலமரத்தில் இருந்த மலைத்தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்தவர்களை தீயணைப்புத் துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே திருமண கோஷ்டியினரை தேனீக்கள் விரட்டி கொட்டியதில் 31 பேர் காயமடைந்தனர்.

சென்னிமலை அருகே திருமண கோஷ்டியினரை தேனீக்கள் விரட்டி கொட்டியதில் 31 பேர் காயமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள முருங்கதொழுவு, கிழக்கு புதுப்பாளையம் கிராமத்தில் கன்னிமார் சுவாமி கோயிலில் நேற்று (திங்கட்கிழமை) திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில், சென்னிமலை 1010 நெசவாளர் காலனியைச் சேர்ந்த கார்த்திக்கும், ஈரோடு மாணிக்கம்பாளையம் தென்றல் நகரை சேர்ந்த காயத்ரிக்கும் திருமணம் முடிந்து கோயில் அருகே உள்ள மண்டபத்தில் பந்தி நடந்து கொண்டிருந்தது.

அப்போது, கோயிலின் பின்புறம் இருந்த ஆலமரத்தில் இருந்த மலைத்தேன் கூடு கலைந்து அதில் இருந்து வெளியேறிய தேனீக்கள் திருமணத்திற்கு வந்தவர்களை சரமாரியாக விரட்டி கொட்டியது. இதில் 13 பெண்கள் உட்பட 31 பேர் காயமடைந்தனர்.


பின்னர், இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சென்னிமலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 2 தனியார் மருத்துவமனைகள் மற்றும் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில், சென்னிமலையைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டும், பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மரத்தில் கூடு கட்டியிருந்த தேன்க்கூட்டை தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அழித்தனர்.

Tags

Next Story