/* */

பவானியில் கனமழை: வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் பாெதுமக்கள் அவதி

பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் தேங்கியது.

HIGHLIGHTS

பவானியில் கனமழை: வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் பாெதுமக்கள் அவதி
X

வயல்வெளிகளிலிருந்து வடிந்த மழைநீர் பவானி அந்தியூர் கோட்டை தொட்டிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே ரோட்டை கடந்து சென்றது.

ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் தேங்கியது. பெருக்கெடுத்த வெள்ளத்தால் அந்தியூர் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு ஒரு மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய நீடித்தது. பவானி சுற்று வட்டார கிராமங்களான தொட்டிபாளையம், ஊராட்சிக்கோட்டை, செலம்ப கவுண்டன்பாளையம், சீதபாளையம், தாளகுளம், சங்கரகவுண்டன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தாழ்வான பகுதிகளை சூழ்ந்தது

தொட்டிபாளையம் ஊராட்சி, பழைய காலனி பகுதியில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். வயல்வெளிகளிலிருந்து வடிந்த தண்ணீர் பவானி அந்தியூர் கோட்டை தொட்டிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே ரோட்டை கடந்து சென்றது. முழங்கால் அளவுக்கு மழை நீர் ரோட்டை கடந்து சென்றதால் வாகனங்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டன. தண்ணீர் ஓரளவு வடிந்த பின்னர் போக்குவரத்துக்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.

மழை பெய்து கொண்டிருந்தபோது பவானியில் இருந்து அந்தியூர் நோக்கிச் சென்ற கார் நிலைதடுமாறி தொட்டிபாளையம் ஏரிக்கரை ஓரத்தில் உள்ள மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணம் செய்த நால்வர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதில், மின்கம்பம் முறிந்து சேதமானது. பவானி வட்டாரப் பகுதிகளில் பெய்த மழை நீர் காடையம்பட்டி ஏரிக்கு பெருக்கெடுத்து வந்ததால் ஏரிக்கரையோரம் பாதையில் வெள்ளநீர் சூழ்ந்தது. ஏரிக் கரையை ஒட்டியுள்ள அங்கன்வாடி மையம் தண்ணீரால் சூழப்பட்டது.

அங்கிருந்த விவசாய தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த எருமைகள், மாடுகள், ஆடுகள் தண்ணீரில் தத்தளித்தன. இதைக் கண்ட பொதுமக்கள் கால்நடைகளை பத்திரமாக மீட்டு மேடான பகுதிக்கு கொண்டு வந்தனர். மழைநீர் பாதித்த பகுதிகளில் தொட்டிபாளையம் ஊராட்சி தலைவர் செல்வராஜ், ஊராட்சி எழுத்தர் மாரியப்பன் பொதுமக்கள் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தற்போது மழை நீர் வடிந்து வருவதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Updated On: 7 Nov 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க