அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா கோலாகலம்

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா கோலாகலம்

குண்டம் திருவிழாவில் பூசாரிகள் முதலில் பூக்குண்டம் இறங்கும் காட்சி. உள்படம்:- குண்டம் திருவிழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்கும் பத்ரகாளியம்மன்.

அந்தியூரில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

அந்தியூரில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்து நிலையம் அருகே பழமையான பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு விழாவுக்காக கடந்த மாதம் 14ம் தேதி பூச்சாட்டப்பட்டது. 26ம் தேதி கொடியேற்றப்பட்டது. அன்று முதல் தினமும் அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடத்தி அலங்காரம் செய்யப்பட்டது. பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலாவும் நடந்தது.

இந்தநிலையில் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு செலம்பூர் அம்மன் கோவிலில் அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பத்ரகாளியம்மனிடம் குண்டம் விழாவுக்கு பூ உத்தரவு கேட்கப்பட்டது. உத்தரவு கிடைத்ததும் கோவில் முன்பு 60 அடி நீளத்துக்கு பக்தர்கள் கொண்டு வந்து கொடுத்த விறகுகள் மூலம் குண்டம் அமைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று காலை பூசாரி முதலில் குண்டம் இறங்கினார். அவரை தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் கையில் பிரம்பு வைத்துக் கொண்டு குண்டம் இறங்கினார்கள். சிறுவர், சிறுமிகளும் பயபக்தியுடன் தீ மிதித்தனர். சிலர் குழந்தைகளை தூக்கிக்கொண்டு இறங்கியதை காணமுடிந்தது. பக்தர்கள் குண்டம் இறங்கியபோது அதை பார்க்க திரண்டு இருந்த பொதுமக்கள் 'தாயே பத்ரகாளி' என்று பக்தி கோஷமிட்டனர்.

தேரோட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. நாளை முதல் வருகிற 8ம் தேதி வரை 4 நாட்கள் மாலை 6 மணி அளவில் தேர் இழுக்கப்படும். குறிப்பிட்ட தூரம் சென்றதும் தேர் நிறுத்தப்படும். 8ம் தேதி மாலை தேர் நிலை வந்து சேறும். 9ம் தேதி பாரிவேட்டையும், 10ம் தேதி வசந்த உற்சவமும் நடைபெறுகிறது. குண்டம் விழாவையொட்டி பவானி போலீஸ் துணை சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி தலைமையில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Tags

Next Story