ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடந்தது.
HIGHLIGHTS
ஈரோடு கிழக்குத் தொகுதியில் இடைத்தேர்தல் குறித்து அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடந்தது.
ஈரோடு மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், வரும் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சியினர் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றுவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்ததாவது, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, 98 - ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் வருகின்ற 27-02-2023 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகின்ற 31-01-2023 அன்று தொடங்கி 07-02- 2023 அன்று வரை நடைபெறும். 08-02-2023 அன்று பெறப்பட்ட வேட்புமனுக்களின் மீது பரிசீலனை நடைபெறும். 10-02-2023 அன்று வேட்புமனு வாபஸ் நடைபெறும். 27-02- 2023 அன்று வாக்குப்பதிவு நடைபெற்று பதிவான வாக்குகள் 02-03-2023 அன்று எண்ணப்பட உள்ளன. மேலும் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றுவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடான ஆலோசனைக் கூட்டம் இன்று (23.01.2023) நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள தேர்தல் விதிமுறைகளை முழுமையாக கடைபிடிப்பது தொடர்பாக அரசியல் கட்சியினர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு முழுமையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இடைத்தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிப்பதற்காக மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகமான மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகமான ஈரோடு மாநகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளது. இங்கு புகார்களை அளிக்கலாம். மேலும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ளன. இவற்றில் பதற்றமான வாக்குச்சாவடிகளின் விவரங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. இடைத்தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி முதற்கட்டமாக அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சியினரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சந்தோஷினி சந்திரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்/ ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ், தேர்தல் வட்டாட்சியர் சிவகாமி, விஜயகுமார் (வட்டாட்சியர், பேரிடர் மேலாண்மை), உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துக்கிருஷ்ணன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.