சத்தியமங்கலம் அருகே கடம்பூர் வனப்பகுதியில் காட்டு யானை உயிரிழப்பு

வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டு யானை.
சத்தியமங்கலம் அடுத்துள்ள குன்றி வனப்பகுதியில் பெண் யானை இறந்து கிடந்த சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காப்பகம் கடம்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட குத்தியாலத்தூர் காப்புக்காடு குன்றி பிரிவு கொளஞ்சன் மடுவு சரக வனப்பகுதியில் கடம்பூர் வனத்துறையினர் செவ்வாய்க்கிழமை (நேற்று) காலை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கே பெண் காட்டு யானை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது, இது குறித்து கடம்பூர் வனச்சரக அலுவலர் ரவிச்சந்திரனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வன கால்நடை மருத்துவர் சதாசிவம் மற்றும் கடம்பூர் வனச்சரகர் தலைமையிலான வனத்துறையினர் சென்று ஆய்வு செய்தனர். இறந்த பெண் யானைக்கு 35 வயது இருக்கலாம் என்றும், உடல் நலக்குறைவு காரணமாக இந்த பெண் யானை இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர். இந்நிலையில், பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் பெண் யானை இறப்பிற்கான முழுமையான காரணம் தெரியவரும் என்று வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.
இதனையடுத்து பிரேத பரிசோதனை முடிந்து வன உயிரிகளுக்காக இறந்த பெண் யானை அந்த வனப்பகுதியிலேயே விடப்பட்டது. சமீப காலமாக வனப்பகுதிகளில் காட்டு யானைகள் இறப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu