போலி முகவரியில் பாஸ்போர்ட் பெற முயன்ற இலங்கை அகதி முகாமை சேர்ந்தவர் கைது
சத்தியமங்கலம் அருகே போலி முகவரியை கொடுத்து பாஸ்போர்ட் எடுக்க முயன்ற இலங்கை அகதி முகாமை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் இலங்கை அகதி முகாமை சேர்ந்தவர் கௌசிகன் (வயது 33). இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்காக, ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் எடுப்பதற்காக போலி முகவரியை கொடுத்து விண்ணப்பித்து இருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக பவானிசாகர் போலீசார் விசாரணை மேற்கொள்வதற்காக சம்பவ இடத்துக்கு வந்த போது தான் கௌசிகன் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பதும், அவர் இலங்கை தமிழரும் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில் பாஸ்போர்ட் எடுப்பதற்கு அவர் முயற்சி செய்துள்ளார்.
இதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்த போது தனது முகவரிக்கு பதிலாக தனது நண்பரின் முகவரியை தனது முகவரியாக கொடுத்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் தனது ஆதார் அட்டையையும் அந்த விண்ணப்பத்தில் இணைத்து இருந்தார். இது குற்றம் என்று தெரிந்தும் இந்த செயலில் அவர் ஈடுபட்டு உள்ளார். இதனையடுத்து கௌசிகனை பவானிசாகர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.