சித்தோடு அருகே ஆம்னி வேனில் ரேஷன் அரிசி கடத்தல்: ஒருவர் கைது

Erode news- ஆம்னி வேனில் ரேஷன் அரிசி கடத்தியதாக கைது செய்யப்பட்ட தாமோதரன்.
Erode news, Erode news today- சித்தோடு அருகே பெருந்துறைக்கு ஆம்னி வேனில் ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறை தலைவர் ஜோசி நிர்மல்குமார் உத்தரவுபடி, கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகரன், ஈரோடு துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க ஈரோடு மாவட்டத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு அடுத்த பவானி- சித்தோடு சாலையில் ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப்பிரிவு காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன், உதவி ஆய்வாளர் மூர்த்தி தலைமையிலான போலீசார் பவானி - சித்தோடு சாலையில் ஆவின் பால்பண்ணை அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக சந்தேகப்படும் படியாக வந்த ஆம்னி காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த ஆம்னி வேனில் 17 மூட்டைகளில் 850 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வேனில் இருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் கோபி பாரியூர் நஞ்சகவுண்டன்பாளையம் செல்வகுமரன் தெருவைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் தாமோதரன் (வயது 25) என்பதும், பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி, பெருந்துறை சிப்காட் பகுதியில் தங்கி வேலை செய்யும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக காரில் கடத்தி செல்வதை ஒப்புக்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து தாமோதரனை போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 850 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu