தாளவாடி அருகே வியாபாரி போல் நடித்து யானை தந்தங்களை பறிமுதல் செய்த போலீசார்

வனப்பகுதியில் யானை தந்தங்களை புதைத்து வைத்திருந்தவரை வியாபாரி போல் நடித்து கைது செய்த மாவோயிஸ்ட் போலீசார் மற்றும் வனத்துறையினர்.
தாளவாடி அருகே வியாபாரி போல் நடித்து, யானை தந்தங்களை வனப்பகுதியில் புதைத்து வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனக்கோட்டம் கேர்மாளம் வனப்பகுதியில் வனத்துறையினருடன், மாவோயிஸ்ட் கண்காணிப்பு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திங்களூர் அருகே உள்ள பாசக்குட்டை கிராமத்தில் யானை தந்தம் பதுக்கி விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், மாவோயிஸ்ட் போலீசார் யானை தந்தங்களை வாங்கும் வியாபாரி போல் நடித்து பாசக்குட்டையைச் சேர்ந்த நபரிடம் விலைக்கு தந்தம் கேட்டுள்ளனர். அப்போது அந்த நபர் வீட்டின் பின்னால் வனப்பகுதியில் சென்று புதைத்து வைத்திருந்த யானை தந்தங்களை எடுத்து வெளியே கொண்டு வந்தார்.
உடனடியாக, மறைந்திருந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் பாசக்குட்டையைச் சேர்ந்த துரைசாமி (வயது 42) என்பதும், அதே கிராமத்தில் பெட்டிக்கடை மற்றும் இறைச்சி கடை நடத்தி வருவதும், இறந்த யானையின் உடலிருந்து தந்தங்களை திருடியதும் தெரிய வந்தது.
இதனையடுத்து, 60 கிலோ எடை கொண்ட ஐந்தரை அடி நீளமுள்ள 2 யானை தந்தத்தை பறிமுதல் செய்த போலீசார், துரைசாமியை கைது செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும், இதன் பின்னணியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளது என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu