ஈரோடு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குவிந்த 465 மனுக்கள்

ஈரோடு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா குறைகளை கேட்டறிந்தார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கட்கிழமை (செப்.25) இன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல் துறை நடவடிக்கை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 465 மனுக்கள் வரப்பெற்றன.
பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் பெருமக்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், 2 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 71 ஆயிரம் 200 ரூபாய் மதிப்பீட்டில் நவீன செயற்கை கால்களையும் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நீரில் மூழ்கி உயிரிழந்த 2 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலையினையும் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ராஜகோபால், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதைச்செல்வி உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu