சத்தியில் கர்நாடக அரசு பேருந்தில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

சத்தியில் கர்நாடக அரசு பேருந்தில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

கைது செய்யப்பட்ட கார்த்திகேயன்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து அரசு பேருந்து மூலம் கடத்தி வரப்பட்ட 16 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.

கர்நாடகாவில் இருந்து அரசுப் பேருந்து மூலம் தமிழகத்துக்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போலீசார் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்துக்கு சென்று கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் நோக்கி வந்த பேருந்துகளில் சோதனை மேற்கொண்டனர்.

இதில், மைசூரில் இருந்து கோவை நோக்கி சென்ற கர்நாடகா மாநில அரசு பேருந்தில் வந்த பயணி ஒருவர் கொண்டு வந்த சாக்கு பைகளை சோதனையிட்டதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 16 கிலோ எடையுள்ள ஹான்ஸ் மற்றும் பான்மசாலா பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.9,600 ஆகும்.

இதையடுத்து, போலீசார் அந்த பையை வைத்திருந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை கட்டபொம்மன் வீதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 40) என்பதும், அவர் கர்நாடகாவில் இருந்து சத்தியமங்கலத்துக்கு புகையிலை பொருட்களை கடத்தி வந்து விற்க முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story