வீட்டுக்குள் புகுந்து திருட முயன்ற வடமாநில இளைஞர்களை மடக்கி பிடித்து தர்ம அடி

வீட்டுக்குள் புகுந்து திருட முயன்ற வடமாநில இளைஞர்களை மடக்கி பிடித்து தர்ம அடி
X

கைது செய்யப்பட்டவர்கள்

நான்கு பேர் தப்பி ஓடி தோட்டத்திற்குள் புகுந்த நிலையில், நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்பு 3 பேரை பிடித்தனர்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கெம்பனூர் பகுதியை சேர்ந்த டிரைவர் சக்திவேல். இவர் குடும்பத்தினருடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்று உள்ளார். பின்னர் இன்று திரும்பி வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது திருடர்கள் இருப்பது தெரியவந்தது.

திருடர்கள் என கூச்சலிட்டதால் அருகில் இருந்தவர்கள் வருவதற்குள், அங்கு இருந்த நான்கு பேர் தப்பி ஓடி தோட்டத்திற்குள் புகுந்தனர். நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்பு 3 பேரை பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். பின்னர் இது குறித்து அவர்கள் தொண்டாமுத்தூர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அவர்களை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த பர்வேஸ், கொல்கத்தாவைச் சேர்ந்த விக்கி (எ) தில்வர் லஷ்கர் மற்றும் கரீம் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை கைது செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கு இருந்து தப்பி ஓடிய மற்றொரு நபரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். இதனால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?