அன்னூர் அருகே சிறுத்தை நடமாட்டம்:தானியங்கி கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு

அன்னூர் அருகே சிறுத்தை நடமாட்டம்:தானியங்கி கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு

சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பொன்னேகவுன்டன் புதூரில் தர்மலிங்கம் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் உள்ள மின்கம்பத்தில் இன்று காலை மின் வாரிய ஊழியர்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டிருந்தனர். அப்போது ​​ஒரு மறைவான புதருக்குள் மயில் ஒன்று முட்டையிட்டு அடைகாத்து வந்தது. அதனை ஒரு சிறுத்தை வேட்டையாட முயன்றதை கண்டு மின்வாரிய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அச்சமடைந்த ஊழியர்கள் சத்தம் எழுப்பியதும், சிறுத்தை அங்கிருந்து ஓடிவிட்டது. பின்னர், நடந்த சம்பவத்தை தோட்ட உரிமையாளரிடம் தெரிவித்தனர்.

தோட்ட உரிமையாளர் பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், சிறுத்தையின் கால் தடங்களை ஆய்வு செய்தனர். மேலும், அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க, தானியங்கி கேமராக்களை பொறுத்தியுள்ளனர். பொன்னேகவுன்டன் புதூரில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அறிந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை மேற்கொண்டுள்ள வனத்துறையினர், சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் கிராம மக்கள் இரவு நேரங்களில் தேவையின்றி தனியாக வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story