கோவையில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பின - ஆம்புலன்சில் நோயாளிகள் காத்திருப்பு

கோவையில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பின - ஆம்புலன்சில்  நோயாளிகள் காத்திருப்பு

கோவையில், ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பியதால், கொரோனா நோயாளிகள் ஆம்புலனிசிலேயே காத்திருக்க வேண்டியுள்ளது. 

கோவையில் ஆக்சிஜன் படுக்கைகள் அனைத்தும் நிரம்பி இருப்பதால், நோயாளிகள் ஆம்புலன்சில் காத்திருக்க வேண்டியுள்ளது.

தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பில், கோவை மாவட்டம், தொடர்ந்து 5-வது நாளாக முதலிடத்தில் இருந்து வருகிறது. நேற்ற்ஒரே நாளில் மட்டும் மாவட்டத்தில் 3488 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் உட்பட 39047 பேர் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் கோவை மாநகர் மற்றும் புறநகரின் பல்வேறு இடங்களில், புதிதாக சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டன. அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் 200 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக 120 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி வழங்கப்பட்டது.

இதன் காரணமாக அரசு மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சைக்காக காத்திருக்கும் நிலை வெகுவாக குறைந்தது. இதன் காரணமாக ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளுக்கான தேவை, பெருமளவு குறைந்தது.

இந்த நிலையில், மீண்டும் ஆக்சிஜன் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு எழுந்துள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் உள்ள ஆக்ஸிஜன் வசதிகொண்ட படுக்கைகள் அனைத்தும் நிரம்பியுள்ள நிலையில், தொற்று பாதிப்பால் மூச்சுத்திணறலுடன் வரும் நோயாளிகள் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனங்களில் காத்திருக்கும் நிலை உள்ளது.

கோவை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் ஆக்சிஜன் வசதிகொண்ட 116 படுக்கைகள் நிரம்பியுள்ளதால், மூச்சுத்திணறல் உடன் புதிதாக வரும் நோயாளிகளை அனுமதிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. கல்லூரி வளாகத்திலும் நோயாளிகள் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் எஞ்சியுள்ள 80 படுக்கைகளுக்கும் உடனடியாக ஆக்சிஜன் வசதி வழங்க வேண்டும் என நோயாளிகளின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story