மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை என்ன - டி.ராஜா கேள்வி
மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை என்ன என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா கேள்வி எழுப்பினார்.
கோயமுத்தூர் சிரியன் சர்ச் சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் . மேலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மக்கள் ஆதரவை பெற்றுள்ளது , இந்திய அரசியல் சட்டங்களை மத்திய பாஜக அரசு தகர்த்து வருகிறது. அதிமுக அரசு மாநில உரிமைகள் மற்றும் மாநில நலன்களை காப்பாற்றுவதில் மிகப் பெரிய தோல்வியை கண்டுள்ளது எனவும், அதிமுக, பாஜக பிரதமர் மோடி படத்தை பயன்படுத்தி பிரச்சாரம் செய்யாதது, தோல்வி பயத்தை காட்டுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் திமுகவிற்கு கொள்கைகள் உள்ளது எனக்கூறிய அவர், மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை என்ன என கேள்வி எழுப்பினார். மக்கள் ஏன் கமல்ஹாசனை பாஜகவின் பி டீம் என சந்தேகப்படுகிறார்கள் எனக்கேட்ட அவர், அதற்கு கமல்ஹாசன் பதிலளிக்க வேண்டுமென தெரிவித்தார்.